அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தலைவர்கள் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், “ஈரான் மக்கள் அயதுல்லா காமேனியின் இறுதிச்சடங்குக்காக ஈரான் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள். நாங்கள் நினைத்தால் ஒரே தாக்குதலில் அவர்களை அனைவரையும் அழிக்க முடியும். ஆனால், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் அதைச் செய்யவில்லை. நாங்கள் நல்லவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்துள்ளோம்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிரம்பின் இந்தக் கருத்துக்கு ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளது.
“மனிதர்களைக் கொல்ல முடியும், ஆனால் கொள்கைகளைக் கொல்ல முடியாது. நீங்கள் அயதுல்லா காமேனியைக் கொன்றுவிட்டதாக நினைக்கிறீர்கள். ஆனால், உண்மையில் நீங்கள் ஒரு நறுமணப் பாட்டிலை உடைத்திருக்கிறீர்கள். இப்போது அதன் வாசம் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது. உங்களால் இந்த மக்களின் துக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், அமெரிக்காவுக்கு என்று சொந்தமாக நாகரிகமோ, வரலாறோ அல்லது மானமோ கிடையாது. அதனால்தான் உங்களால் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவரது உடல் தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், புனித நகரங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஜூலை 9-ஆம் தேதி மஷாத் நகரில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
