மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்விக்குப் பிறகு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் ஏற்பட்டுள்ள உடைப்பு கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மொத்தம் 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்களாக மாறி தனித்து செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், மாநில சட்டமன்ற சபாநாயகர் அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளார். இந்த அதிருப்திக் குழுவின் தலைவரான ரிதர்பா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிருப்தியாளர்கள், மம்தா பானர்ஜி உருவாக்கி வளர்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். முதலில் கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய அவர்கள், கட்சியின் சின்னம் மற்றும் அங்கீகாரம் தங்களுக்கே உரியது என தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், தற்போதைய கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாக வாதிட்டுள்ளனர்.
மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை பாஜகவின் மறைமுக சதி எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். “தைரியம் இருந்தால் நேரடியாக பாஜகவில் சேர்ந்து என்னை எதிர்க்கட்டும்” என அதிருப்தியாளர்களுக்கு சவால் விட்டுள்ளார். ஆனால், அவர்கள் அதை பொருட்படுத்தாமல் கட்சியை முழுமையாக வளைத்துப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
மம்தா தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளது. கட்சியின் அரசியலமைப்பின்படி அமைப்புக் குழுக்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதை சுட்டிக்காட்டிய அவர்கள், 2022-ல் நடைபெற்ற அமைப்புத் தேர்தல்களுக்குப் பிறகு தற்போதைய நிர்வாகம் 2027 வரை செல்லுபடியாகும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், “கிளர்ச்சி தரப்பின் கூற்று உண்மையானால், 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் சின்னத்தையும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்களையும் எவ்வாறு பயன்படுத்தினர்?” என மம்தா தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஜூன் 22 அன்று அதிருப்தியாளர்கள் நடத்திய சிறப்பு மாநாடு கட்சி அரசியலமைப்புக்கு எதிரானது எனவும், அதன் முடிவுகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் இரு தரப்புகளிடமிருந்தும் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள், அமைப்புத் தேர்தல் ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கோரியுள்ளது. ஆனால் மம்தா தரப்பு, “அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே ஆணையத்திடம் உள்ளன” எனக் கூறி, ஆணையத்தின் செயல்பாட்டில் ஓரவஞ்சனை இருப்பதாக மறைமுகமாகக் குற்றம்சாட்டியுள்ளது.
ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உடைப்பு மேற்கு வங்காள அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவின் வலிமையான தலைமையில் உருவான கட்சி இப்போது உள்கட்சி மோதலால் பலவீனப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
