தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒரு மாத கால சிறப்பு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை இன்று (ஜூலை 8) தொடங்கி வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெறவுள்ளது.
இந்த சிறப்புப் பணியின் முதன்மை நோக்கம், போதைப்பொருட்களை அதிகளவில் கைப்பற்றுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனுக்குடன் கைது செய்வதும் ஆகும். இதற்கான விரிவான செயல் திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. மண்டல ஐஜிக்கள் மற்றும் டிஐஜிக்கள், தங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெறும் இந்த நடவடிக்கைகளை அன்றாடம் நேரடியாகக் கண்காணித்து, காவல்துறையினருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையின் செயல்பாடுகள், பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் அளவு மற்றும் கைது நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். இந்த ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். மேலும், மாவட்ட மற்றும் மாநகர காவல் அதிகாரிகள் தங்களது வாராந்திர அறிக்கை அறிக்கையை ஒவ்வொரு சனிக்கிழமையும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையையும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி ஒருங்கிணைத்து வழிநடத்துவார்.
