பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா நாட்டில் சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மைத்துனரான தணிகா என்ற தணிகைவேல் என்பவரும் ரவுடி தான். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உட்பட 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், நன்னடத்தை பிணையில் இருந்து வரும் நிலையில், அண்மை நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை போலீசார் வலைவீசி தேடியும் வந்தனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிவகாஞ்சி காவல் எல்லைக்குட்பட்ட குஜராத் சத்திரம் பகுதியில் பதுங்கி இருந்த தணிகாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 10-க்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்து அழைத்து சென்று பிறகு சிறையில் அடைத்தனர்.
