கர்நாடகாவில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயனக் கழிவுகளை தடுக்கவும், 2,000 ஏக்கர் ‘பைமாசி’ நிலங்களுக்கு பட்டா வழங்கவும் வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கர்நாடகாவில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படும் ரசாயன மற்றும் கழிவுநீரை தடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன நடைபயணமும் மனு அளிக்கும் போராட்டமும் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள், சுத்திகரிப்பு இன்றி கெலவரப்பள்ளி அணை வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஓசூர் வட்டாரத் தலைவர் ராஜா ரெட்டி தலைமையில், கெலவரப்பள்ளி அணையில் தொடங்கிய பேரணி ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, கர்நாடக அரசும் தமிழ்நாடு அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டத்தில், கர்நாடகாவில் இருந்து வரும் நச்சுக் கழிவுகளை உடனடியாக தடுக்க வேண்டும், ஓசூர் மற்றும் பாகலூர் பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும், மேலும் பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் 2,000 ஏக்கர் ‘பைமாசி’ நிலங்களில் வாழும் 700 விவசாயக் குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், “கர்நாடக அரசிடம் நாங்கள் காவிரி நீரைக் கேட்கிறோம்; ஆனால் அவர்கள் கழிவுநீரைத்தான் அனுப்புகிறார்கள். ஒருகாலத்தில் பல்லுயிர்கள் வாழ்ந்த கெலவரப்பள்ளி அணை இன்று துர்நாற்றம் வீசும் ரசாயனக் குட்டையாக மாறியுள்ளது. இந்த நச்சு நீர் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாநில அரசும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், பல தலைமுறைகளாக ‘பைமாசி’ நிலங்களில் விவசாயம் செய்து வரும் குடும்பங்களுக்கு பட்டா இல்லாததால் வங்கி கடன் கூட பெற முடியாத நிலை இருப்பதாகவும், உடனடியாக நில உரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் போராட்டத்தில் மாநிலச் செயலாளர் பெருமாள், மாவட்டத் தலைவர் முருகேஷ், மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
