நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 20-ம் தேதி, நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியின்போது போலீசார் நடத்திய தாக்குதலில் சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இந்தநிலையில், ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள சன்சத் மார்க் மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் நேற்று (ஜூலை 22) நள்ளிரவு மீண்டும் பதற்றம் நிலவியது.
இந்தநிலையில், நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவான விசாரணை மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்களைமத்திய அரசு அமைக்கவுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதே அரசின் முதன்மையான முன்னுரிமை என்றும், இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க நினைப்பவர்கள் எவர் ஆனாலும் தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
https://x.com/narendramodi/status/2080135258142617785?
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நமது இளைஞர்களின் நலனையும் விட முக்கியமானது எதுவுமில்லை! வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோரை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குளறுபடிக்கு எதிராக டெல்லியின் ஜந்தர் மந்திரில் மாணவர்கள் நீண்ட காலமாக நடத்தி வரும் போராட்டத்திற்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
