தேசிய தகுதித் தேர்வு (NEET) வினாத்தாள் கசிவு பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களை வெற்று வாக்குறுதிகளாலும் அடக்குமுறை நடவடிக்கைகளாலும் தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்று எச்சரித்துள்ளார்.
எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடியின் “விரைவு நீதிமன்றங்கள்” அமைக்கப்படும் என்ற அறிவிப்பை “வெறும் கண் துடைப்பு நாடகம்” என்று தள்ளுபடி செய்தார். அரசு புள்ளிவிவரங்களே இதை உறுதிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் உள்ள 880 விரைவு நீதிமன்றங்களில் ஏற்கெனவே 13.9 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், புதிய உறுதிமொழிகள் வெறும் காலத்தாழ்வு நடவடிக்கையே என்பது அவரது வாதம்.
மேலும், FTSC சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 2,45,579-ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேர்வு நடத்தும் பொறுப்பில் உள்ள தேசிய தேர்வு முகமை (NTA) முழுமையாகத் தோல்வியடைந்த ஒரு அமைப்பு என்று தாகூர் தெரிவித்தார். தேர்வு முறையை கூட ஒழுங்காக நடத்தத் தெரியாத அமைப்பு, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார். அந்தக் கோரிக்கைகள் வருமாறு: கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்; அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசின் அணுகுமுறை இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாக்குறுதிகளுக்கு அப்பால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இளைஞர் சமூகத்தின் நம்பிக்கையை மீட்டெடுப்பது சவாலாகிவிடும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
