காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது ஜண்டு குமார், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG 2026) ஆண்கள் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்துள்ளார். இந்த சாதனை மூலம் அவர் தேசத்தின் பெருமையை உயர்த்தியதோடு, எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் அமைந்துள்ளார்.
சிறு வயதில் ஏற்பட்ட போலியோ நோயின் தாக்கத்தால் உடல் ஊனமுற்ற நிலையிலும், வறுமை மற்றும் கடினமான குழந்தைப் பருவத்தைத் தாண்டி இந்த உயரத்தை எட்டியுள்ளார் ஜண்டு. பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னாட் கிராமத்தில் பிறந்த இவர், ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்ததால், பெற்றோருடன் சேர்ந்து காய்கறிகள் விற்பனை செய்ய உதவினார். பள்ளிப் படிப்பு, வீட்டு வேலைகள் என பல்வேறு பொறுப்புகளுக்கு இடையே தனது உடல் வலிமையை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்தார்.
2010 முதல் 2012 வரை வெறும் உடற்பயிற்சியாக பளுதூக்கும் பயிற்சியைத் தொடங்கிய ஜண்டு, பின்னர் குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற துறைகளிலும் முயற்சி செய்தார். இருப்பினும், மாற்றுத்திறனாளிகளுக்கான பவர்லிஃப்டிங் துறையில் தனது உண்மையான திறமையைக் கண்டறிந்தார். குறைந்த நிதி உதவியுடன், தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஒழுக்கமான உழைப்பின் மூலம் சர்வதேச அரங்கில் இடம்பிடித்துள்ளார்.
CWG 2026 போட்டியில், 181 கிலோ மற்றும் 190 கிலோ எடைகளை வெற்றிகரமாக தூக்கி 130.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். இறுதி முயற்சியில் 196 கிலோவைத் தூக்க முயன்றபோது தோல்வியடைந்தாலும், அவரது செயல்பாடு அபாரமாக இருந்தது. இந்த வெற்றி இந்தியாவுக்கு இப்போட்டியில் முதல் பதக்கமாக அமைந்தது. ஜண்டுவின் இந்த சாதனை, வெறும் விளையாட்டு வெற்றி மட்டுமல்ல. அளவற்ற வலிமை, தளராத உறுதி மற்றும் பல ஆண்டுகளாக தொடர்ந்த முயற்சியின் வெற்றிக் கதையாகும்.
இந்நிலையில் ஜண்டு குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஆண்களுக்கான ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, #CWG2026-ல் இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கி வைத்துள்ள ஜண்டு குமாரின் செயல்பாடு அபாரமானது! அவருக்கு வாழ்த்துகள். அவரது இந்தச் சாதனை, அளவற்ற வலிமை, தளராத உறுதி மற்றும் பல ஆண்டுகால ஒழுக்கமான முயற்சி ஆகியவற்றின் வலிமையான பிரதிபலிப்பாகும். ஒவ்வொரு சவாலையும் வென்று சர்வதேச அரங்கில் சிறந்து விளங்குவதன் மூலம், அவர் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார் மற்றும் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
