திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் உள்ள இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
உலகப் புகழ்பெற்ற அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்று, சுவாமியையும், அம்பாளையும் தரிசித்து செல்கின்றனர்.
இந்தநிலையில், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த மணிக்குமார் என்ற பக்தர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ‘இடுக்கு பிள்ளையார்’ கோயிலுக்குச் சென்ற மணிக்குமார், வழக்கப்படி இடுக்கின் வழியே நுழைந்து சென்று பிள்ளையாரை தரிசனம் செய்ய முயன்றார். அப்போது, அவரது உடல் பருமன் காரணமாக இடுக்கில் இருந்து வெளியே வர முடியாமல் பாதியிலேயே சிக்கிக் கொண்டார்.
நீண்ட நேரமாக வெளியே வர முடியாமல் தவித்த அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக, உடன் வந்தவர்களும் அங்கிருந்த பொதுமக்களும் சேர்ந்து அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
