தமிழ்நாடு மாநில மதுவகை விற்பனை நிறுவனம் (டாஸ்மாக்) தொடர்பான பல கோடி ரூபாய் அளவிலான நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பண வசூல் புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை புதிய முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கைது நடவடிக்கையை எதிர்பார்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே அமலாக்கத் துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த அவர், இந்த புதிய வழக்கை பெரும் பின்னடைவாகக் கருதுகிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்கள், டாஸ்மாக் அலுவலகங்கள், மதுபான உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முறைகேடுகளுக்கு உள்ள ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆதாரங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எஃப்.ஐ.ஆரின்படி, டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநர் ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ். விசாகன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ஆதரவாளர்களான ரதீஷ் ராஜ், மூலனூர் கார்த்தி உள்ளிட்டோர் உட்பட மொத்தம் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பார்கள், மதுபான ஆலைகள், பீர் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தக்காரர்களுடன் இணைந்து டெண்டர் நடைமுறைகளில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இந்த முறைகேடுகள் அதிக அளவில் நிகழ்ந்துள்ளன. 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பெரும் அளவிலான நிதி மோசடிகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கோவை வடக்கு மண்டலத்தில் ரூ.17.27 கோடி, தெற்கில் ரூ.13.58 கோடி, நீலகிரியில் ரூ.1.95 கோடி என அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மதுபான பாட்டில்களுக்கு எம்.ஆர்.பி. விலையைவிட ரூ.10 முதல் ரூ.100 வரை, வெளிநாட்டு மதுபானங்களுக்கு பாட்டிலுக்கு ரூ.500 வரை கூடுதல் தொகை சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டதும் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஒப்பந்தங்கள் மற்றும் செயல்பாடுகளில் தனது செல்வாக்கை மறைமுகமாகப் பயன்படுத்தியதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்த வழக்கு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
