பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) கடந்த ஜூலை 27 அன்று தொடங்கிய முதற்கட்ட சட்டசபைத் தேர்தலை மையப்படுத்தி பெரும் பதற்றம் நிலவுகிறது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) தலைமையில் மக்கள் நடத்திய அமைதியான பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 33க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் PoK முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராவலாகோட்டில் இருந்து முசாபராபாத் நோக்கி JAAC அமைப்பினர் நடத்திய நீண்ட மார்ச்சில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் JAAC மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரர் உஸ்மான் நசீரும் உயிரிழந்தார். ஜூலை 27, 28, 29 ஆகிய தினங்களில் தொடர்ந்த இந்த வன்முறையால் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
PoK-இன் சுமார் 35 சதவீத நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள பாகிஸ்தான், அங்கு தனி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டசபை அமைப்புகளை நடத்தி வருகிறது. எனினும், உள்ளூர் மக்களுக்கு எதிரான அடக்குமுறை, அடிப்படை உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு, பொருளாதார சுரண்டல் உள்ளிட்ட பிரச்னைகள் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. இவற்றுக்கு எதிராக JAAC தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
தேர்தலை புறக்கணிக்குமாறு JAAC மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. மீர்பூர் பிரிவில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் உண்மையான வாக்கு சதவீதம் 10%க்கும் குறைவாகவே இருந்ததாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் அரசு 45% வாக்குப்பதிவு என அதிகப்படுத்திக் காட்டியுள்ளது. இது தேர்தல் நடைமுறையில் மோசடி நடைபெற்றதை சுட்டிக்காட்டுகிறது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
போராட்டக்காரர்களின் குரலை வெளியுலகுக்கு தெரியாமல் தடுக்க PoK முழுவதும் இணையம், மொபைல் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முழுமையாக முடக்கியுள்ளது. JAAC அமைப்பு, இந்தக் கொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவும், வன்முறையை உடனடியாக நிறுத்தவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு முறையீடு செய்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தத் தேர்தலை “சட்டவிரோத ஆக்கிரமிப்பை மூடி மறைக்கும் நாடகம்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது. PoK மக்களின் உண்மையான ஆசைகளும் உரிமைகளும் புறக்கணிக்கப்படுவதாகவும், பாகிஸ்தானின் அடக்குமுறை தொடர்வதாகவும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது இப்போதைய கோரிக்கையாக உள்ளது.
