உக்ரைன் போரில் உயிரிழந்த, காயமடைந்த அல்லது மாயமான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் போருக்குச் சென்று உயிரிழந்த, மாயமான அல்லது காயமடைந்த இந்தியர்களின் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு சிறப்பு அலுவலரை நியமிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போரில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஏதுவாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மூலம் இழப்பீட்டுத் தொகையைத் கோர பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெளியுறவுத்துறை உதவ வேண்டும். மேலும், அவர்களது உறவினர்களின் உடல்களை மீட்கவும், இழப்பீடு பெறவும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவும் மாநில சட்டப் பணிகளும் உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தகவல்களைப் புரிந்துகொள்வதில் மொழித் தடை ஏற்படாத வகையில், உரிய விவரங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. போரில் துயரமடைந்தவர்களின் குடும்பங்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
