வரும் ஆகஸ்ட் 15 முதல் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள எஃப்.ஐ.ஹெச் (FIH) உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கு முன்பாக, இந்திய ஹாக்கி அணியின் பாரம்பரிய நீல நிறச் சீருடையைக் காவி (Orange/Saffron) நிறத்திற்கு மாற்ற ஹாக்கி இந்தியா (Hockey India) எடுத்த முடிவு பெரும் சர்ச்சையையும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக இந்திய ஹாக்கி அணியின் அடையாளம் மற்றும் பெருமையாகத் திகழ்வது ‘நீல நிறச் சீருடை’ (Bleed Blue) ஆகும். 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கோப்பை வெற்றிகள் என இந்திய ஹாக்கியின் பொற்காலத் தருணங்கள் அனைத்தும் இந்த நீல நிறச் சீருடையுடனேயே பின்னப்பட்டவை. இந்த நிலையில் திடீரென தேசிய அணியின் முதன்மைச் சீருடையை மாற்றுவது விளையாட்டின் அடையாளத்தையே சீர்குலைக்கும் செயல் எனப் பலரும் கொந்தளித்துள்ளனர்.
தற்போது சர்வதேச ஹாக்கி போட்டிகள் நடைபெறும் செயற்கை புல்வெளிகள் (Blue Turf) நீல நிறத்தில் இருப்பதால், போட்டிகளின் போது வீரர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் தெளிவாக அடையாளம் காண்பதில் தடங்கல் ஏற்படுவதாக ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது. இந்த முடிவு முழுக்க முழுக்க தொழில்நுட்பக் காரணங்களுக்காகவும், ஆட்டத்தின் திறனை மேம்படுத்துவதற்காகவும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகே எடுக்கப்பட்டது என்றும் ஹாக்கி நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால், இந்த விளக்கத்தை முன்னாள் வீரர்களும், விளையாட்டு விமர்சகர்களும் கடுமையாக நிராகரித்துள்ளனர். முன்னாள் இந்திய ஹாக்கி அணித் தலைவர் வீரன் ரஸ்குயின்ஹா (Viren Rasquinha), “அர்ஜென்டினா கால்பந்து அணி தனது பாரம்பரிய கோடுகள் கொண்ட சீருடையை மாற்றுமா? இந்திய ஹாக்கியின் அடையாளம் மற்றும் பெருமை நீல நிறம் மட்டுமே! இதில் அரசியல் வேண்டாம், பாரம்பரியத்தைக் காப்பாற்றுங்கள்” எனத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், “மைதானமும் சீருடையும் ஒரே நிறத்தில் இருந்தால் விளையாட முடியாதா? பாகிஸ்தான் அணி பச்சை நிற மைதானத்தில் பச்சை நிறச் சீருடை அணிந்து தான் உலகக்கோப்பைகளை வென்றது” என விளையாட்டுப் பத்திரிகையாளர்கள் ஹாக்கி இந்தியாவின் சாக்கை எள்ளி நகையாடியுள்ளனர். இதனிடையே, “வீரர்களிடம் ஆலோசனை நடத்திதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்ற ஹாக்கி இந்தியாவின் கூற்றைப் பொய் என மறுத்துள்ள நடப்பு தேசிய அணி வீரர்கள் சிலர், தங்களிடம் இதுகுறித்து எந்தவொரு கருத்தும் கேட்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், “பிரேசில் அணிக்கு மஞ்சள், அர்ஜென்டினாவிற்கு நீலக் கோடுகள் போல இந்தியாவிற்கு நீல நிறம் தான் உணர்வுப்பூர்வமான அடையாளம். பாஜக அரசு தனது அரசியல் சித்தாந்தத்தைத் திணிப்பதற்காகவும், விளையாட்டுத் துறையில் ‘காவிமயமாக்கலை’ புகுத்துவதற்காகவும் இத்தகைய தரங்கெட்ட அரசியலில் ஈடுபடுகிறது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

சர்வதேச அளவில் ஹாக்கி போட்டிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது பந்து தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே 2012 லண்டன் ஒலிம்பிக் முதல் நீல நிற மைதானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பல ஆண்டு காலமாக லட்சக்கணக்கான ரசிகர்களின் உணர்வோடு கலந்த ஒரு விளையாட்டின் முதன்மை நிறத்தை, மைதானத்தின் நிறத்தைக் காரணம் காட்டி மாற்றுவது இந்திய ஹாக்கி வரலாற்றின் ஒரு பகுதியை அழிப்பதற்குச் சமம் என விளையாட்டு உலகம் கொதித்து போய் உள்ளது.
