ஜூன் 22, தமிழ்நாடு முதல்வர், தவெக தலைவர், விஜய்யின் பிறந்தநாள். 2024ல் ஒரு கட்சியின் தலைவர், 2026ல் தமிழ்நாட்டின் முதல்வர் என உயரத்தை தொட்டவரின் அறிமுகம், தமிழ் திரையுலகில் தனி அடையாளமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, தவிர்க்க முடியாத இடத்தை தந்துள்ளது.
1992-ம் ஆண்டு தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆரம்பக்கால கட்டத்தில் குடும்பப் பாங்கான மற்றும் காதல் கதைகளில் கவனம் செலுத்தினார்.
செந்தூரப்பாண்டி, ரசிகன், விஷ்ணு, தேவா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படங்களில் நடித்த விஜய்க்கு மிகப் பெரிய திருப்புமுனையையும், ரசிகர்களிடம் நிரந்தரமான ஒரு இடத்தையும் தந்தது, விக்ரமன் இயக்கத்தில் 1996ல் வெளியான பூவே உனக்காக திரைப்படம். வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்து, விஜய்க்கு பிரகாசமான பாதையை அமைத்தது. அடுத்த ஆண்டிலேயே வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம், இன்னும் அழுத்தமாக குடும்பங்கள் குறிப்பாக பெண்கள் கொண்டாடும் நாயகனாக விஜய்யை உயர்த்தியது. இன்றும் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்களின் பட்டியலில் காதலுக்கு மரியாதை படத்திற்கும் இடம் உண்டு.
‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘குஷி’, ஷாஜகான், பிரியமானவளே என மென்மையான காதல் களத்தில் இருந்து நகர்ந்து அதிரடியாக ஆக்ஷன் தளத்தில் தடம் வைத்து ‘திருமலை’, ‘கில்லி’, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என தொடர்ந்து வெற்றிப் பட்டாசுகளை கொழுத்தினார் விஜய். 2002ல் வெளியான தமிழன் படத்தின் மூலம் சமூக அக்கறை கொண்ட கருத்துகள் பேசுவதை தொடங்கினார். ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ திரைப்படங்கள் சமூகத்தில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தலையும், விவசாயிகளின் நிலம் அபகரிக்கப்படுவதையும் மையமாகக் கொண்டு வெளிவந்தன. குறிப்பாக, ‘கத்தி’ திரைப்படம் பெருநிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராக விவசாயிகளின் குரலாக ஒலித்தது. ‘மெர்சல்’ திரைப்படம் மருத்துவத் துறையில் நிலவும் ஊழலை பேசியது. பெண்களின் முன்னேற்றத்தையும், பெண் விளையாட்டு வீரர்களின் போராட்டங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்தது ‘பிகில்’. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வன்முறையற்ற சமூக உருவாக்கத்தைப் உணர்த்தியது ‘தெறி’.
தனது திரைப் பயணத்தின் அடுத்த பாய்ச்சலாக நேரடி அரசியல் விமர்சனங்களைக் கொண்ட கதைகளில் கவனம் செலுத்தினார் விஜய். Time to Lead என்ற ஒரு Caption தந்து, 2013ல் வெளியான தலைவா திரைப்படம், பல்வேறு அரசியல் நெருக்கடிகளை சந்தித்தது.
‘சர்கார்’ திரைப்படம் தேர்தல் முறையில் நடக்கும் ஊழல் மற்றும் ஜனநாயகக் கடமைகளைப் பேசியது.
அரசியலுக்கு வருதற்கு முன்பாக வெளியான சில திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் வசனங்கள், குட்டிக் கதைகள் வழியாக, அதிகார வர்க்கத்தையும், அரசியல் சூழலையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்தார் விஜய்.
2024 பிப்ரவரி 2ம் தேதி தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்தை தெரிவித்த விஜய், தனது திரைப் பயணத்தின் கடைசிப் படமாக 2025ல் ஜனநாயகன் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். ஊழல், தேர்தல் விழிப்புணர்வு என்ற கதைக்களமாக இருந்தாலும், வசனங்கள், காட்சிகளில் தனது கட்சியின் கொள்கைகளையும் கொண்டு சேர்க்கும் விதத்தில் அமைந்திருந்ததாக கூறப்பட்டு தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் சட்டப் போராட்டத்தை சந்தித்தது ஜனநாயகன்.
திரையில் ‘நாளைய தீர்ப்பு’ கொடுத்து தொடங்கிய பயணம் ‘ஜனநாயகன்’ வரை பல்வேறு தடைகளைக் கடந்தும், சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜய்.
