பனைத் தொழிலை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில், 55 அடி உயரமுள்ள பனைமரத்தில் ரூ.60 ஆயிரம் செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்துள்ள இளைஞரின் முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தினகர், விவசாயத்துடன் பாரம்பரிய பனைத் தொழிலையும் செய்து வருகிறார். பல தலைமுறைகளாக அவரது குடும்பம் பனைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
தினகரின் தந்தை ஏசுதாசன் (70) பல ஆண்டுகளாக பனை ஏறும் தொழிலாளியாக பணியாற்றியவர். வயது முதிர்வு காரணமாக தற்போது பனைமரத்தில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பனைத் தொழில் அழியாமல் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், தனது வீட்டின் அருகே உள்ள 55 அடி உயரமுள்ள பனைமரத்தில் ரூ.60 ஆயிரம் செலவில் இரும்புக் கம்பிகளால் வளைவு வடிவிலான நிரந்தர படிக்கட்டை அமைத்துள்ளார்.
இந்த படிக்கட்டு மூலம் இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரும் பாதுகாப்பாக பனைமரத்தின் உச்சிக்குச் சென்று பதநீர் இறக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தினகர் கூறுகையில், “தலைமுறை தலைமுறையாக பனைத் தொழில் செய்து வருகிறோம். ஆனால் தற்போது பனை ஏறும் தொழிலாளர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். அதனால் பனைத் தொழில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டேன். இதுபோன்ற படிக்கட்டுகளை அதிகமான பனைமரங்களில் அமைத்தால், இளைஞர்கள் எளிதாக பனை ஏறி தொழிலை தொடர முடியும்” என்றார்.
மேலும், “ஒரு பனைமரத்தில் இருந்து தினமும் சுமார் 20 லிட்டர் பதநீர் கிடைக்கும். அதிலிருந்து சுமார் 5 கிலோ கருப்பட்டி தயாரிக்கலாம். இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். பனைத் தொழிலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
