இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய அசாத்திய பங்களிப்பிற்காக, பிரபல முன்னணி நடிகர் ஆர். மாதவனுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜூன் 23) வழங்கி கௌரவித்தார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விருது வழங்கும் மேடையில் பிரதமர் மோடிக்கு மாதவன் தனது மரியாதையான வணக்கத்தைத் தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த குடியரசு தின விழாவின் போது வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் மாதவன். குறிப்பாக ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விக்ரம் வேதா’ மற்றும் அவர் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்த அவரது கலைச் சேவையைப் பாராட்டி இந்த ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது இந்தச் சாதனைக்குத் திரை உலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
