இந்தியத் திரையுலகின் வரலாற்றைத் திருப்பிப் போட்ட ‘பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஏப்ரல் 28) 9 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான இந்தப் பிரம்மாண்ட படைப்பு, வெறும் திரைப்படமாக மட்டுமன்றி, இந்திய சினிமாவின் தரத்தையும் வணிக எல்லையையும் உலக அளவில் உயர்த்திய ஒரு கலாச்சார நிகழ்வாகவே கொண்டாடப்படுகிறது.

சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘பாகுபலி 2’, அன்றைய காலகட்டத்தில் இந்திய சினிமா கண்டிராத வகையில் 1,788 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்தியாவில் மட்டும் 1,429 கோடி ரூபாயும், வெளிநாட்டுச் சந்தைகளில் 359 கோடி ரூபாயும் ஈட்டியது. குறிப்பாக, உலக அளவில் 1,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தப் படம் நிகழ்த்தியது. மேலும், மிகக் குறுகிய காலத்தில் 100 கோடி முதல் 1,000 கோடி வரையிலான மைல்கற்களை எட்டிய படமாகவும் இது விளங்கியது.

தென்னிந்தியத் திரைப்படங்கள் வட இந்தியச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற பிம்பத்தை இந்தப் படம் முற்றிலுமாக உடைத்தது. இதன் ஹிந்தி பதிப்பு மட்டும் சுமார் 511 கோடி ரூபாய் வசூலித்து, நேரடி ஹிந்திப் படங்களுக்கே கடும் சவாலாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி எனப் பல மொழிகளில் வெளியான இப்படம், மொழித் தடைகளைத் தாண்டி தரமான கதையம்சம் இருந்தால் இந்தியாவையே வெல்லலாம் என்பதை நிரூபித்தது. நடிகர் பிரபாஸை ஒரு தேசிய நட்சத்திரமாகவும், ராஜமௌலியை இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக மேலும் நிலைநிறுத்தியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version