இந்தியாவில் விமான சேவைத் துறை கடும் நிதிச்சுமையை எதிர்கொண்டு வருவதாகவும், உடனடி அரசு தலையீடு இல்லையெனில் சில சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. விமான எரிபொருள் விலை (ATF) கடுமையாக உயர்ந்திருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு ( Federation of Indian Airlines – FIA) அமைப்பு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய நிலைமை “மிகுந்த அழுத்தத்தை” உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் ஏர் இந்தியா,இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
எரிபொருள் விலை கடும் உயர்வு
சமீபத்திய விலை உயர்வால்,விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.விமான நிறுவனங்களின் மொத்த செலவுகளில் பொதுவாக 30–40% வரை எரிபொருள் செலவு இருக்கும். ஆனால் தற்போதைய சூழலில் அது 55–60% வரை உயர்ந்துள்ளதாக விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நிறுவனங்களின் இலாப விகிதம் கடுமையாக சுருங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.எரிபொருள் விலை அதிகரிப்பால் பல விமான வழித்தடங்கள் பொருளாதார ரீதியாக செயல்பட முடியாத நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக FIA எச்சரித்துள்ளது. குறிப்பாக சர்வதேச சேவைகளில் எரிபொருள் செலவு அதிகமாக இருப்பதால், விலை நிர்ணயத்தில் நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரம் இல்லாமல் போகிறது.
இந்த நிலை தொடர்ந்தால், சில விமான சேவைகள் வழித்தடங்களை குறைக்கவும் அல்லது மறுசீரமைக்கவும் வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என விமான நிறுவனங்கள் கூறுகின்றன.
உடனடி நடவடிக்கை கோரிக்கை
இந்த நெருக்கடியை சமாளிக்க சில உடனடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று FIA கோரியுள்ளது. அதில் முக்கியமானவை:விமான எரிபொருளுக்கு விதிக்கப்படும் 11% மத்திய உற்பத்தி வரியை (Excise Duty) தற்காலிகமாக நீக்க வேண்டும்.மாநில அளவில் விதிக்கப்படும் VAT வரியை குறைக்க வேண்டும். சில மாநிலங்களில் இது 25% வரை இருப்பதாக கூறப்படுகிறது.கட்டமைப்பு மாற்றங்களும் அவசியம்.இதற்குப் பிறகாவது, விமான எரிபொருள் விலைக்கு ஒரு நிலையான மற்றும் முன்னறிவிக்கக்கூடிய விலை அமைப்பு (pricing mechanism) உருவாக்கப்பட வேண்டும் என விமான நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், விமான எரிபொருள் விலை அதே அளவில் குறையாமல் இருப்பதாகவும், சுத்திகரிப்பு லாப விகிதம் அல்லது சுத்திகரிப்பு விலை வித்தியாசம் ( Refining margins or crack spreads ) போன்ற காரணங்களால் விலை அதிகமாகவே இருப்பதாகவும் விமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் விமான நிறுவனங்களுக்கு வழித்தட திட்டமிடல், சேவை அளவு மற்றும் டிக்கெட் விலை நிர்ணயம் போன்றவை கடினமாகி வருகிறது.
உலகளாவிய காரணிகள்
தற்போதைய விலை உயர்வின் பின்னணியில் மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக ஹார்மூஸ் நீரிணை போன்ற முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உலக சந்தையில் எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.இதன் நேரடி தாக்கமே விமான எரிபொருள் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
பயணிகளுக்கு என்ன பாதிப்பு?
எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்தால் அதன் தாக்கம் பயணிகளுக்கும் நேரடியாக இருக்கும். பொதுவாக விமான எரிபொருள் செலவு அதிகரித்தால் விமான டிக்கெட் விலைகள் அதிகரிக்கும். சில வழித்தடங்களில் சேவை எண்ணிக்கை குறைக்கப்படலாம். சில வழித்தடங்கள் முற்றிலும் நிறுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது
இந்திய விமானத் துறைக்கு தற்போதைய நிலை வெறும் செலவு உயர்வு பிரச்சினை மட்டும் அல்ல என்று FIA தனது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வு தொடரும் நிலையில், வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால், விமான சேவைகளின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையே கேள்விக்குறியாகும் என FIA மேலும் எச்சரித்துள்ளது.
