இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளவர் இசைஞானி இளையராஜா. 60களில் தொடங்கி 2கே வரை இவரது பாடல்களை கேட்காத ஆட்களே இல்லை எனலாம். ஒரு மனிதன் தனது மனநிலைக்கு ஏற்றவாரு மருந்து கொடுக்க இளையராஜாவின் இசை மட்டுமே போதுமானது எனலாம்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவில் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனை சரிசெய்ய அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிறந்த நாளில் என்னை வாழ்த்துகிறார்கள் நான் அவர்களை வாழ்த்துகிறேன் அவர்கள் அன்புக்கு நன்றி என இளையராஜா தெரிவித்துள்ளார். இன்று மாலை பெங்களூருவில் சிம்பொனி இசை நிகழ்ச்சி இருப்பதால், அதற்கு தயாராகிக் கொண்டு இருப்பதாகவும், எல்லோரும் அமைதியாக போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் எனவும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.
இருப்பினும் அவரைக் காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால் சிறிது நேரம் ஸ்டூடியோவிற்குள் சென்றவர், தள்ளு முள்ளு சரியானதும் மீண்டும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
