நடிகர் கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987 ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமை பெற்றுள்ளதாகக் கூறி, எஸ் ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன், நாயகன் படத்தின் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை 2023 ம் ஆண்டு ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தினை வெளியிடும் உரிமையை கடந்த 2023 அன்று பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை மறைத்து V.S.பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதால், தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் மறு வெளியீடு செய்யப்படுவதால், நாயகன் படம் மறு வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டார்.
அதேசமயம், மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஏடிஎம் புரொடக்ஷன்ஸ், வி.எஸ். பிலிம்ஸ் இண்டர்னேஷனல் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் போது, நாயகன் படத்தை 16 முறை பார்த்துள்ளதாகவும், காட்சி வாரியாக தன்னால் இப்போது சொல்ல முடியும் எனவும் நீதிபதி செந்தில்குமார் குறிப்பிட்டார்.
