75 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் இன்று கேக் வெட்டிக் கொண்டாடினார். அவரது மனைவி லதா ரஜினிகாந்த், இன்று ரீரிலீஸான ‘படையப்பா’ படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்துக் கொண்டாடினார்.

பிரதமர் மோடி: “75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்: “ரஜினிகாந்த் – வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்” என தெரிவித்தார்.

வைகோ வாழ்த்து: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
“இந்த நாள் மீண்டும் மீண்டும் வரவும், பலப் பல மகிழ்ச்சியை தந்து, வெற்றிகரமான நாளாக அமையவும், நீண்ட ஆயுளைப் பெற்று வாழவும் வாழ்த்துகிறேன்.மேலும், திரைத்துறையில் இன்னும் மிக உயர்ந்த சிகரங்களை அடையவும் வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு வைகோ வாழ்த்தினார்.

அன்புமணி வாழ்த்து: இன்று 76-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும்   நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து  மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version