பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு கடைசி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (டிச.5) வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின், அனைத்து கட்டண பிரீமியர் காட்சிகளும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன.

இதனையடுத்து பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே, படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, “கனத்த இதயத்துடன், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக ’அகண்டா 2’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்பதை வருத்தத்துடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது எங்களுக்கு மிகவும் வேதனையான தருணம். படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும், சினிமா பிரியர்களுக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.

இந்தச் சிக்கலை விரைவில் தீர்க்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். இந்த சிரமத்திற்கு மனதார மன்னிப்பு கோருகிறோம்.

உங்களின் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. விரைவில் ஒரு நேர்மறையான அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்று உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version