தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர்கள் பட்டியலில் இருப்பவர் வெற்றிமாறன். இவரும், பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் ’பேட் கேர்ள்’. வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த டீசருக்கு பலரும் கடுமையான விமர்சனங்களை பெற்றது. இளம் பெண்களின் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, மனச்சிக்கல் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதனால் பெண்கள் குறித்து தவறாக சித்தரிக்கும் விதமாக இந்த டீசர் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்துக்கு சென்சார் போர்டு ‛யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. வருகிற செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.
இந்த நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த பேட் கேர்ள் படம் சம்பந்தமாக தற்போது ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், இந்த டீசரில் சிறுவர் சிறுமிகள் குறித்தான ஆபாச காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுள்ளது. அதனால் சமூக வலைதளத்தில் இருந்து ’பேட் கேர்ள்’ படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. என்றாலும் இந்த படத்திற்கு சென்சார் போர்டு, யுஏ சான்றிதழ் கொடுத்து விட்டதால் எந்தவித சிக்கலும் இல்லாமல் திட்டமிட்டபடி படம் திரைக்கு வந்து விடும் என்று கூறப்படுகிறது.