பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் திரைப்படங்களில் நடிப்பதற்கு, பாலிவுட் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு (FWICE) அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநரும் தயாரிப்பாளருமான ஃபர்ஹான் அக்தர் தயாரிப்பில் உருவாகவிருந்த ‘டான் 3’ (Don 3) திரைப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதற்காகப் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் ப்ரீ – ப்ரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்தன.

படம் தொடங்கும் நிலையை எட்டியபோது, எதிர்பாராத விதமாகக் கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் இருந்து தான் விலகுவதாக ரன்வீர் சிங் படக்குழுவினருக்கு அதிர்ச்சித் தகவல் கொடுத்துள்ளார். கோடிக்கணக்கில் பணமும் நேரமும் செலவிடப்பட்ட நிலையில், ரன்வீர் சிங்கின் இந்தத் திடீர் முடிவால் ‘டான் 3’ படக்குழுவினர் பெரும் நஷ்டத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்தனர். இதுகுறித்து தயாரிப்புத் தரப்பில் பாலிவுட் திரைப்பட அமைப்பிடம் (FWICE) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை விசாரித்த திரைப்பட கூட்டமைப்பு, தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் ஒப்பந்த மீறலைக் கருத்தில் கொண்டு, நடிகர் ரன்வீர் சிங் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கு தற்காலிகத் தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

FWICE அமைப்பின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நடிகர் ரன்வீர் சிங்கின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,  திரையுலகினர் மீதும், ‘டான்’ படக்குழுவினர் மீதும் ரன்வீர் சிங் எப்போதுமே மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார். தொழில்முறை விவாதங்களை கண்ணியத்துடனும் முதிர்ச்சியுடனும் கையாள வேண்டும் என்பதால் தான் அவர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார்.

பொதுவெளியில் பரவி வரும் ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவரது கவனம் முழுவதும் தற்போது ஒப்புக்கொண்டுள்ள அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதே உள்ளது.

‘டான்’ திரைப்படக் குழுவினருடன் ரன்வீருக்கு என்றும் நல்லுறவு தொடரும். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய அவர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

விலகியதற்கான காரணம் என்ன?

அமிதாப் பச்சன், ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டான்’ திரைப்பட வரிசையின் 3-வது பாகத்தை ஃபர்ஹான் அக்தர் இயக்கவிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் முதலே ரன்வீர் சிங் கால்ஷீட் தள்ளிப்போனதாகக் கூறப்படும் நிலையில், படத்தின் திரைக்கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் ரன்வீருக்குப் பிடிக்காததாலேயே அவர் படத்திலிருந்து விலகியதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version