ஐனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ஜனநாயகன் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தணிக்கைச்சான்று கிடைக்க பெறாததால் பட தயாரிப்பு நிறுவனமான கே. வி. என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், நீதிபதி பி.டி.ஆஷா முன்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி அவசர முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version