இந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்று பிப்ரவரி 26-ம் தேதி உதய்பூரில் மிக எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, இன்று புது டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அவர்கள், தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான முதல் பத்திரிகையை வழங்கி ஆசி பெற்றனர். பிரதமரைச் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

அந்தப் புகைப்படங்களில், விஜய் வெள்ளை நிற பாரம்பரிய உடையிலும், ராஷ்மிகா அழகான இளஞ்சிவப்பு நிறப் புடவையிலும் காட்சியளிக்கின்றனர். இந்தப் பதிவில், “நமது மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், எங்களை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி ஐயா” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வரும் மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதால், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சினிமா முதல் அரசியல் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த ஜோடிக்கு, இணையதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version