நெல்லையில் காதல் மனைவியை கொலை செய்த கணவர், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் முத்துக்குமார். மினி பேருந்து ஓட்டுநரான இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தின மணியன்குடியை சேர்ந்த ஜாய்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி அதிகாலை திடீரென ஜாய்ஸ் தலையில் காயத்துடன் மயக்கமாகியுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஜாய்ஸ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார், ஜாய்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் முத்துக்குமாரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். முதலில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக நாடகமாடிய முத்துக்குமார், முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.
பிறகு அவரிடம் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில், மனைவியை அடித்துக் கொன்றதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது, காதல் திருமணம் செய்த எங்களது வாழ்க்கை சந்தோசமாக சென்று கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக அவளது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவளிடம் நான் கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பத்தன்றும், அவளது நடத்தை குறித்து நான் கேட்டதால் ஏற்பட்ட தகராறு முற்றியதில், பூரி கட்டையால் தலையில் தாக்கினேன்.
இதில் அவளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தாள். அவள் மயக்கம் தெளியாமல் இருந்ததால் பயந்து போன நான், பின்னர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வரவழைத்தேன். அந்த ஆம்பலன்சில் மனைவியை ஏற்றி கொண்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து கொலையை மறைக்க முயற்சித்தேன். போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கி கொண்டேன், என தெரிவித்தார்.