தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழா அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், நேற்று ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த போதிலும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான கூடுதல் ஆவணங்கள் மற்றும் ஆதரவு கடிதங்களை ஆளுநர் மாளிகை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாத சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான அரசியல் சூழலைக் கையாள, தவெகவின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இன்று காலை 10 மணிக்குள் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என விஜய் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, தவெகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன், சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆளுநரின் தாமதத்திற்கு எதிராக சட்ட ரீதியான அணுகுமுறைகள் மற்றும் சட்டசபையில் பலத்தை நிரூபிப்பதற்கான வியூகங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version