சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மென்ஸ் கோவ்’ (Taj Fisherman’s Cove) தனியார் நட்சத்திர விடுதியில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்று முடிந்தது.
தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ் கட்சி தரப்பில் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜோதிமணி எம்.பி) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் முகைதீன் ஆகிய தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில்காங்கிரஸ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக பி. மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்ட பிறகு, தவெக – காங்கிரஸ் இடையேயான பிணைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப் பகிர்வு கிடைக்காததால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய கட்சிகள், தற்போது தவெக அமைச்சரவையில் இணைந்து புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன.

கோவளம் கூட்டத்தின் 3 முக்கிய முடிவுகள்
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட தகவலின்படி, இந்த உயர்மட்டக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
தோழமைக் கட்சிகளைத் துரிதமாக ஒருங்கிணைக்க விரைவில் தனிக் குழு அமைக்கப்படும். தவெக கூட்டணிக்குக் கொள்கை மற்றும் மக்கள் நலத் திட்டங்களை வகுக்க ‘குறைந்தபட்ச செயல்திட்டம்’ (Common Minimum Programme) உருவாக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தீர்மானமாக, தவெக கூட்டணிக்கு விரைவில் நல்ல பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முதல்வர் விஜய் இந்த பெயரினை அறிவிப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூகம்
ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தற்போது காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை இந்தக் கூட்டணி கூட்டாக எதிர்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை கொள்கையில் இருந்து தமது கட்சி விலகாது என கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய் உறுதி அளித்ததாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கூட்டணி கட்சிகள் சொல்வதை தவெகவினர் ஏற்றுக்கொள்கிறார்கள்; மாற்றிக்கொள்ள சங்கடப்படுவதில்லை. மீண்டும் தேர்தல் வந்தால் தவெக கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

தேசிய அரசியலைப் பொறுத்தமட்டில், காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தேசிய அளவில் ’இண்டியா’ (INDIA) கூட்டணியில் நீடிக்கின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக-வை தேசிய அளவில் ’இண்டியா’ கூட்டணியுடன் அதிகாரப்பூர்வமாக இணைப்பது குறித்தும், பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான ஒரு பலமான மதச்சார்பற்ற கூட்டணியை மாநில அளவில் வலுப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில் கோவளத்தில் விதைக்கப்பட்டுள்ள இந்த புதிய கூட்டணி, தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் சகாப்தத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
விழாக்கோலம்
முன்னதாக முதலமைச்சர் விஜய் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களின் வருகையையொட்டி நட்சத்திர விடுதி வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விடுதிக்கு வரும் நபர்கள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டன. மேலும், முதல்வர் விஜய்யை வரவேற்கும் விதமாக ஈசிஆர் (ECR) சாலை நெடுகிலும் கட்சித் தொண்டர்களால் கொடிகள் கட்டப்பட்டு விழாக்கோலமாகக் காட்சியளித்தது.
