கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு (100 நாள் திட்டம்) பதிலாக புதிய ‘விபி-ஜி ராம் ஜி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்கப்படும். இந்தத் திட்டம் நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் ‘வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்’ என்ற பெயரில் இது அமல்படுத்தப்படுகிறது. தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், முன்பு 100 நாட்களாக இருந்த வேலை உத்தரவாதத்தை 125 நாட்களாக உயர்த்தியதாகும். இது கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறினால் வேலை இழப்பு உதவித் தொகை வழங்கப்படும். முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட கூலியில் கால் பங்கும், அதற்குப் பிறகு பாதியும் உதவித் தொகையாகக் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் அல்லது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். தாமதம் ஏற்பட்டால் 16-வது நாள் முதல் நிலுவைத் தொகைக்கு தினசரி 0.05 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

குடும்பங்கள் கிராம பஞ்சாயத்தில் பதிவு செய்து வேலை உறுதி அட்டை பெற வேண்டும். இந்த அட்டை 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் மற்றும் 3 ஆண்டுகள் செல்லுபடியாகும். தனித்து வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டோர், பழங்குடியினர், விடுதலையான கொத்தடிமைகள் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும். திட்டத்தில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பங்கேற்க வேண்டும்.

தனித்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பை ஊக்குவிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிராம சபை ஒப்புதலுடன் ஒவ்வொரு பஞ்சாயத்தும் மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்கும். விவசாய விதைப்பு மற்றும் அறுவடை உச்சகட்ட காலங்களில் ஆண்டுக்கு 60 நாட்கள் வரை திட்டப் பணிகள் நிறுத்தப்படும். இதனால் விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை தவிர்க்கப்படும். தொழிலாளர்களுக்கு வசிக்கும் இடத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வேலை வழங்கப்படும். அதற்கு அப்பால் வேலை என்றால் 10 சதவீத கூடுதல் கூலி வழங்கப்படும்.

பயோமெட்ரிக் வருகைப் பதிவு, ஜியோ-டேக்கிங், ஜி.பி.எஸ். மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் பணிகள் கண்காணிக்கப்படும். வேலை இடங்களில் குடிநீர், நிழல், முதலுதவி வசதிகள் கட்டாயம். 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு குழந்தைப் பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டு கூலி வழங்கப்படும். வேலையின்போது ஏற்படும் காயங்கள், மருத்துவச் சிகிச்சை, மருத்துவமனை அனுமதி, உயிரிழப்பு அல்லது ஊனத்துக்கு இழப்பீடு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் சமூக தணிக்கை நடைபெறும். அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இது மத்திய-மாநில இணைத் திட்டமாகும். மொத்த செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கும். வேலை இழப்பு உதவி மற்றும் தாமத இழப்பீட்டை மாநில அரசே வழங்கும். இந்தத் திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வலியுறுத்தப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version