ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே வலசை- மணக்குளம் கிராமங்களுக்கு இடையேஉள்ள அய்யனார், தர்ம முனீஸ்வரர் கோயில் வளாக சுற்றுச்சுவர் எடுக்க குழி தோண்டியபோது, முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் கோயில் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் தாழிகள் புதைந்துள்ளன. சுற்றுச்சுவர் எடுக்கத் தோண்டியபோது வெளிப்பட்ட ஒரு தாழிக்குள் 3 குவளைகள், தட்டு, கிண்ணம், கும்பா, சிறிய பானை ஆகியவை இருந்துள்ளன. இவை கறுப்பு சிவப்பு, சிவப்பு நிறமுடையன. 2018-ல் கோயிலின் தெற்கில் குளம் தோண்டியபோது முதுமக்கள் தாழிகள் வெளிவந்த பகுதியில் ஆய்வு செய்தபோது உடைந்த சுடுமண் தாங்கிகள், மூடிகளில் குறியீடுகள் இருந்தன. பெருக்கல் குறி, தலைகீழ் சூலம், ஏணி ஆகிய குறியீடுகள் மூன்று சிவப்பு நிற ஓடுகளிலும், ஏழு கறுப்பு சிவப்பு ஓடுகளிலும் உள்ளன.

கி.மு.4000 முதல் கி.மு.1500 வரையிலான பெருங்கற்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவர். அதை நரி, கழுகு போன்றவை இரையாய் கொண்டபின் கிடக்கும் எலும்புகளை சேகரித்து, அவற்றுடன் அவர்கள் பயன்படுத்திய அல்லது படையல் பொருட்களை சிறிய முதுமக்கள் தாழியில் வைத்து மூடி அடக்கம் செய்துள்ளனர். பிற்காலத்தில் பெரிய தாழிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது.

தாழிக்குள் இருந்த கறுப்பு சிவப்பு மட்கலங்கள் அடர் வண்ணத்துடனும், வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் உள்ளன. இவற்றைச் சுடும் போது அதன் மேல் உப்பு தூவி பளபளப்பாக ஆக்கியுள்ளனர். மலைப் பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட சமவெளிப் பகுதிகளில் உள்ள சிறிய  தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால் இவை சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது.

இங்கிருந்து வடக்காக 500மீ தொலைவில் விக்கிரமபாண்டியபுரம் ராஜா கோயில் திடல் பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடக்கின்றன. இது மக்கள் குடியிருந்த பகுதியாகவும், தாழிகள் உள்ள வலசை, மணக்குளம் இடுகாடாகவும் பெருங்கற்காலத்தில் இருந்துள்ளதை அறியலாம். தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் வெளிவரும் என தகவல் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version