தாய்லாந்தின் நான்டபுரி (Nonthaburi) மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் வெள்ளிக்கிழமை இன்று மாணவன் ஒருவன் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆசிரியர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைத்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாங்காக்கின் வடமேற்கே உள்ள ‘டெப்சிரின் நான்டபுரி பள்ளி’யில் (Debsirin Nonthaburi School) இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராயல் தாய் காவல் துறையின் பேச்சாளர் டிரைரோங் பிவ்பான் (Trairong Piwpan) ஏபி செய்தி நிறுவனத்திடம் இதனை உறுதிப்படுத்தினார். காயமடைந்த 15 பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
உள்ளூர் மக்களால் “மன உளைச்சலில் இருந்தவன்” என்று வர்ணிக்கப்படும் அந்த மாணவன், பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு தனது தந்தைக்குச் சொந்தமான கைத்துப்பாக்கியால் தனது தாத்தா மற்றும் பாட்டியைச் சுட்டுக் கொன்றுள்ளான்; அதன்பிறகே பள்ளிக்குச் சென்று இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளான்.
துப்பாக்கிச் சூட்டுக்கான உண்மையான நோக்கம் என்னவென்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மாணவனின் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளையும் மருத்துவக் கவனத்தையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்று நிகழ்ந்த சம்பவம், இந்த ஆண்டில் தாய்லாந்தில் பதிவாகும் இரண்டாவது பள்ளித் துப்பாக்கிச் சூடு ஆகும். கடந்த பிப்ரவரி மாதம், தெற்கு தாய்லாந்தில் உள்ள ஒரு பொதுப் பள்ளியில் 17 வயது மாணவன் ஒருவன் காவலர் ஒருவரின் துப்பாக்கியைத் திருடிச் சுட்டதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பல கோரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, 2022-ல் வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள காப்பகத்தில் நிகழ்ந்த படுகொலையில் 22 குழந்தைகள் உட்பட 36 பேர் கொல்லப்பட்டதும், 2023-ல் பாங்காக் வணிக வளாகத்தில் நடந்த தாக்குதலும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
