காலநிலை ஆய்வு அமைப்பான ‘கிளைமேட் சென்ட்ரல்’ வெளியிட்ட புதிய தகவலின்படி, இரவு நேரக் கடும் வெப்பத்தால் சென்னையைச் சேர்ந்த மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 93 மணி நேரத் தூக்கத்தை இழக்க நேரிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ‘தூக்கமற்ற தலைநகர்’ என்ற மோசமான பட்டத்தைப் பெற்றுள்ளது சென்னை.
கடந்த 2020 முதல் 2025 வரை உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டதில், வெப்பமான இரவுகளால் மனிதர்கள் ஆண்டுக்கு சராசரியாக 56 மணி நேரம் தூக்கத்தை இழந்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இரவு வேளையில் உடல் வெப்பநிலையைக் குறைத்து ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும் இயற்கை முறைக்கு இந்த உஷ்ணம் பெரும் தடையாக அமைகிறது. இதனால் தூக்கமின்மை ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதய பாதிப்புகள் மற்றும் உடல் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற கடுமையான உடல்நலக் கேடுகள் உருவாகும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
