மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்ட ‘கரீப் கல்யாண்’ (Garib Kalyan) திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
https://x.com/narendramodi/status/2063829392711897503?
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் இந்த மாற்றங்களின் மையப்புள்ளியாக ஏழைகளின் நலனே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் எப்போதும் ‘அந்த்யோதயா’ (கடைசி மனிதனின் எழுச்சி) என்ற கொள்கையால் உத்வேகம் பெற்றுள்ளோம். பல தசாப்தங்களாகப் பின்தங்கியிருந்தவர்களுக்கு வளர்ச்சியின் பலன்கள் சென்றடைவதை எங்களது அரசு உறுதி செய்துள்ளது,” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நேரடிப் பணப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் உதவிகள் நேரடியாகவும், வெளிப்படையான முறையிலும் மக்களைச் சென்றடைவதாகவும், இதனால் முறைகேடுகள் தடுக்கப்பட்டு அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட முக்கியத் திட்டங்கள்: மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பல்வேறு முக்கிய திட்டங்களையும் பிரதமர் தனது பதிவில் பட்டியலிட்டுள்ளார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY): 2015-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு மலிவு விலையில் சொந்த வீடு மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியத்தை வழங்குகிறது.
ஜல் ஜீவன் மிஷன்: 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் நோக்கம், இந்தியாவின் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரைக் குழாய் மூலம் வழங்குவதாகும்.
ஆயுஷ்மான் பாரத்: 2018-ல் தொடங்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான இது, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்குகிறது.
ஸ்வச் பாரத் மிஷன்: 2014-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், கழிப்பறைகள் கட்டுதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது.
அந்த்யோதயா அன்ன யோஜனா: நாட்டின் ஏழ்மையான குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை இத்திட்டம் உறுதி செய்கிறது.
பிஎம்-கிசான் (PM-KISAN): 2019-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி 3 தவணைகளாக நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
கடைசி மனிதனுக்கும் அதிகாரம் அளித்து, ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (Viksit Bharat) என்ற கனவை நனவாக்குவதை நோக்கிய மக்கள் இயக்கமாக இந்த கரீப் கல்யாண் பயணம் மாறியுள்ளது என்று பிரதமர் மோடி தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
