தமிழ்நாட்டுப் பெண்களின் அவசரப் பாதுகாப்புக்காகத் தமிழக வெற்றிக் கழக அரசால் பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ பிரிவைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கே பாலியல் ரீதியான தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,  தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? என்று கேள்வி எழுப்பி இது என்ன ஒரு வெட்கக்கேடு என கடுமையாக விமர்சித்து உள்ளார்.

“நான் உங்கள் அண்ணன்” என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய் அவர்கள், முதலில் இந்த புகாரைத் தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழகப் பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version