ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள சோழியக்குடி, காந்தி தெரு பகுதியை ம சேர்ந்தவர் நாகராஜன். கூலித் தொழிலாளியான இவருக்கு, பாண்டிச்செல்வி என்ற மனைவியும், முவேதா (12-ஆம் வகுப்பு முடித்துள்ளார்), காவியாஸ்ரீ (10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்) ஆகிய இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில்  தொடந்து 20 வருடமாம குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

​கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், கூலித் தொழிலாளி நாகராஜனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய வீட்டின் வேலியை அரிவாளால் வெட்டி நாசப்படுத்திய வீடியோவும் வைரலாகி வருகிறது.  அவர், “இந்த இடத்தை காலி செய்யாவிட்டால் குடிசையைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவேன்” என்று கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

​இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் இவர்களது குடிசை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், வீட்டில் இருந்த ஆதார் அட்டை ரேஷன் அட்டை, கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் உடைகள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகின.

​இந்த விபத்து குறித்து, மிரட்டல் விடுத்த ராஜேந்திரன் மீது தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை தரப்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.

​இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காகத் தொண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, அங்கிருந்த போலீசாரின் முன்னிலையிலேயே, குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரன் மீண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த ராஜேந்திரன் அதிமுக பிரமுகராக இருந்து கொண்டு இப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை வளைத்து வேலி பிடித்து வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது இதற்கு வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையினர் உடந்தையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது

​அரசு புறம்போக்கு இடத்தில் நீண்ட நாட்களாகக் குடியிருந்து வரும் தங்களுக்குப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஏழை எளிய மக்களை மிரட்டி, வீட்டைத் தீ வைத்துக் கொளுத்திய நபர் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் தங்களுக்கு உரிய பாதுகாப்பும், எரிந்துபோன ஆவணங்களை மீண்டும் பெற்றுத் தரவும், குடியிருக்க வசதி செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version