நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. எனினும், இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம், சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 10-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தீப்தி இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். இதற்கு முன்பு 355 சர்வதேச விக்கெட்டுகளுடன் இந்தியாவின் பழம்பெரும் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த தீப்தி, தற்போது 356 விக்கெட்டுகளுடன் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளாக விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறி வந்த தீப்திக்கு, இந்த விக்கெட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:

தீப்தி சர்மா (இந்தியா) – 356

ஜூலன் கோஸ்வாமி (இந்தியா) – 355

எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) – 336

கேத்தரின் சிவர்-பிரண்ட் (இங்கிலாந்து) – 335

முன்னதாக, ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றிக்கான நம்பிக்கையை அளித்தனர். ஆனால், அதன் பின்னர் களம் புகுந்த ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ கார்ட்னர் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு அபாரமாக 100 ரன்கள் குவித்து ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், ஒரு ஓவர் மீதமிருக்கையிலேயே இலக்கை எட்டிப் பிடித்தது. மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே சேஸ் செய்யப்பட்ட மிகப்பெரிய இலக்கு இதுவாகும். அரையிறுதிக்கு முன்னேற கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய மகளிர் அணி, 170 ரன்கள் என்ற இலக்கைப் பாதுகாத்து வெற்றி பெற முடியாமல் லீக் சுற்றுடன் உலகக்கோப்பை தொடரிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version