தன்னை படுகொலை செய்ய ஈரான் முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றால், அந்த நாட்டின் மீது இதுவரை கண்டிராத அளவிலான இராணுவ தாக்குதலை நடத்துமாறு அமெரிக்காவுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

‘நியூயார்க் போஸ்ட்’ இதழிடம் பேசிய ட்ரம்ப், பல ஆண்டுகளாகவே ஈரான் தன்னை கொல்ல விரும்புவதாகக் கூறினார்; அதேவேளையில், உடனடி படுகொலைத் திட்டம் ஏதும் இருப்பதாகப் புதிய உளவுத் தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். ஈரானின் ‘கொலை இலக்கு’ பட்டியலில் நீண்ட காலமாக உள்ளேன் என்றும் அதைத்தான் நாங்கள் எதிர்கொள்கிறோம் என்றும் கூறிய டிரம்ப், “ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், அதுபோல் ஏதேனும் நடந்தால், அவர்கள் இதுவரை கண்டிராத அளவிலான குண்டுவீச்சை அவர்கள் மீது நடத்துமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபரை குறிவைத்து ஈரான் தீட்டியதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்த உளவுத் தகவலை இஸ்ரேல் சுட்டிக்காட்டியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், புதிதாக ஏதேனும் அச்சுறுத்தல் எழுந்துள்ளதா என்ற கருத்தை அவர் நிராகரித்தார்.

“இல்லை, இல்லை. இஸ்ரேலிடமிருந்து அப்படி எதுவும் வரவில்லை. இல்லை, இல்லை,” என்று கூறிய ட்ரம்ப், “நான் நீண்ட காலமாகவே (ஈரானின் கொலைப் பட்டியலில்) முதலிடத்தில் இருக்கிறேன்; வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது,” என்றார்.

ஒருபுறம் தாக்குதல்கள் நடந்தாலும், மற்றொருபுறம் கத்தாரில் மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் தொழில்நுட்ப அளவிலான ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், “ஈரான் ஒரு பொய்யான நாடு, அவர்களுடன் பேசுவது நேர விரயம்” என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version