ஆடிப்பெருக்கை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகளும் விற்பனையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் வாரச் சந்தை நடப்பது  வழக்கம். இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான ஆடி 18 வருகின்ற திங்கட்கிழமை  கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது.

காலை ஐந்து மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில்  சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தைவிட கூடுதலாக ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

வெள்ளாடு, செம்மறி ஆடு என ரகத்திற்கு  ஏற்ப ஒவ்வொரு ஆடும் 8000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரம் வரை இந்த சந்தையில் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ற நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி, இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 3 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version