அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு, அங்குள்ள ஆடுகள நிலை மற்றும் சூழலுக்கு விரைவாக தங்களை மாற்றிக்கொள்ள முடியாததே முக்கிய காரணம் என்று இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்தார்.

தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறும் நெருக்கடியான அட்டவணையில், குறைந்த பயிற்சி நேரத்திலேயே மைதான சூழலுக்கு விரைவாக ஏற்படுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

பெல்ஃபாஸ்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில், அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. டி20 உலக சாம்பியனான இந்தியாவை எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் முதன்முறையாக அயர்லாந்து வென்றது இதுவே முதல் முறை.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் சர்மா, ஒரு அணியாக நாம் எவ்வளவு விரைவாக ஆடுகள நிலைக்கு ஏற்ப மாறுகிறோம் என்பதுதான் முக்கியம். தொடர்ந்து போட்டிகள் நடைபெறும்போது, கிடைக்கும் குறுகிய பயிற்சி நேரத்திலேயே சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாட வேண்டும். வலுவான அணியாக இருந்தால் அதற்கு விரைவாக தகுந்து கொள்ள வேண்டும். இன்று அதற்கான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது பலனளிக்கவில்லை,” என்றார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, கேப்டன் லார்கன் டக்கர் அரைசதம் அடித்ததன் உதவியுடன் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர பேட்டிங் வரிசை அயர்லாந்தின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மட்டும் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இருப்பினும், மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றமளித்தனர்.

அயர்லாந்து தரப்பில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரீஸ் மற்றும் மேட் ஹாலார்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அறிமுக வீரர் ஜெய் மூன்றா 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இரு அணிகளும் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதவுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version