அன்பே டயானா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்வில் செய்தியாளர்களிடம் நடிகர் சேத்தன் கூறியதாவது;-
“ இயக்குநர் பாரி முதலில் இந்தக் கதையை என்னிடம் சொல்ல வந்தபோது, ‘நான் என்ன கதாபாத்திரம் பண்ணப் போகிறேன்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘நீங்கள்தான் அப்பா கதாபாத்திரம்’ என்றார். அதைக் கேட்டதும், ‘என்னடா, தொடர்ந்து அப்பா கதாபாத்திரம்தானா வருகிறது?’ என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது. நான் கிண்டலாக, ‘நண்பன் சமுத்திரகனி இன்னும் இளைஞனாக நடித்துக் கொண்டிருக்கிறார்; நான் மட்டும் அப்பாவாகிவிட்டேனே!’ என்று சொன்னேன். அதற்கு பாரி, ‘நீங்க யங் ஃபாதர்’ என்றார்.
ஆனால், முழுக் கதையையும் கேட்ட பிறகு, ‘இது அப்பா கதாபாத்திரம் மட்டும் இல்லை; தேவைப்பட்டால் தாத்தா கதாபாத்திரம்கூட மகிழ்ச்சியாக செய்வேன்’ என்று சொன்னேன். அந்த அளவுக்கு அவர் கதையை அழகாக எழுதியிருந்தார்.
என்னுடைய கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முழுமையான பயணமும், அழகான நிறைவும் இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன. அதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.
அதேபோல், அந்த எழுத்து திரையிலும் மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போதே இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது. இது ஒரு பிரில்லியண்டான திரைப்படம். கண்டிப்பாக பாரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
பாரி மட்டுமல்ல, ரம்யா, கோபி, பரத் ஆகியோருக்கும் இந்தப் படம் மிக முக்கியமான படமாக அமையும். பரத் ஏற்கனவே நல்ல உயரத்தில் இருக்கிறார்; இன்னும் உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல் ஷெல்லி பிரதரின் ஒளிப்பதிவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
இந்தப் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சத்யா மேடம், சரவணன் சார், யுவராஜ் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள சசி சார், சமுத்திரக்கனி சார் மற்றும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ”
