எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட12 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ்சை சந்தித்து ஒன்றிணைந்துள்ள நிலையில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், அருண்மொழிதேவன் ஆகிய 3 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் வீட்டுக்கு வரவில்லை.
அதிமுகவில் கடந்த இரு வாரங்களாக நீடித்து வந்த உள்கட்சி மோதல் மற்றும் பிளவுக்கு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 12 எம்.எல்.ஏ.க்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை (இபிஎஸ்) நேரில் சந்தித்து மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். இதன்மூலம் இபிஎஸ் அணியின் பலம் 40 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தப் பிளவு சட்டசபையில் நடைபெற்ற முக்கிய ஓட்டெடுப்பின்போது உச்சக்கட்டத்தை எட்டியது. விஜய் அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் அணி வாக்களிக்க, இபிஎஸ் அணி எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அதிமுக இரு அணிகளாக உடைந்தது.
ஆரம்பத்தில் சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ.க்களும், இபிஎஸ் அணியில் 22 எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். விஜய் அமைச்சரவை விரிவாக்கத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த வேலுமணி-சண்முகம் தரப்பினருக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஒரு அமைச்சர் பதவி கூட வழங்கப்படாததால் அவர்களிடையே அதிருப்தி அதிகரித்தது. இந்நிலையில், அடுத்தடுத்து ஆறு எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ் அணிக்கு திரும்பினர். மேலும் நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் சி.வி.சண்முகம் அணியின் பலம் 15 ஆக சுருங்கியது.
இந்தப் பின்னணியில், வேலுமணி முன்னெடுப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியது. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் விரிவான ஆலோசனை நடத்தினர். இதில், இபிஎஸ் தலைமையை ஏற்று ஒன்றுபட்டு செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது. இன்று காலை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர், வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்துக்கு சென்றனர். அங்கு இபிஎஸ்க்கு சால்வை அணிவித்து தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர்.
எனினும், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மற்றும் அருண்மொழிதேவன் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் இந்த இணைப்பு சந்திப்பில் பங்கேற்கவில்லை. இதனிடையே சபாநாயகரை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன்னை கொறடாவாக அங்கீகரிக்க கோரிய மனுவை திரும்ப பெற்றுள்ளார். இந்த இணைப்பு அதிமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு புதிய வலிமையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் ஒற்றுமை மீண்டும் வலுப்பெறும் என்கின்றனர் மூத்த தலைவர்கள்.
