நான் நடுநிலையில் இருந்து பணியாற்றுகிறேனா இல்லையா என்பதை நான் தீர்ப்பு வழங்கும்போது இந்த நாடே தெரிந்து கொள்ள போகிறது குற்றம் சுமத்துகிறவர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், நீதி நேர்மை தவறாமல், பத்திரிகைத் துறை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு முன்னோடியாகச் செயல்பட்டவர்.
தமிழர் இருக்கும் இடமெல்லாம் தன்னுடைய பத்திரிகை சென்று சேரும் வகையில் தமிழை வளர்த்தவர் சி.பா. ஆதித்தனார்.
தமிழை வளர்ப்பதில் தமிழர் நலன் போற்றுவதில் அவர் ஆற்றியிருக்கிற பணிகள் என்றென்றும் நினைவிலே கொள்ளத்தக்கது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்தும், ஒருதலைப் பட்சமாக சபாநாயகர் செயல்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, நான் நடுநிலையில் இருந்து பணியாற்றுகிறேனா இல்லையா என்பதை நான் தீர்ப்பு வழங்கும்போது இந்த நாடே தெரிந்து கொள்ளப் போகிறது. அத்துடன், குற்றம் சுமத்துகிறவர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் எனக் கூறிய சபாநாயகர், இரு வேறு குழுக்களாக பிரிந்துள்ள அதிமுகவின் இரு தூண்களாக இருப்பவர்கள் அளித்துள்ள மனுக்களை ஆய்வு செய்து அழித்து உள்ளார்கள் அது என் ஆய்வில் உள்ளது.
உரிய நேரத்தில் உரிய முடிவெடுத்து சட்டசபையில் அறிவிக்கும்போது நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடு தெரிந்து கொள்ளும் என்றார்.
