அமோனியா வாயுக் கசிவு நிகழ்வில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 5 பேரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள கன்னிகைப் பேர், மஞ்சங்காரனை பகுதியில் செயல்பட்டு வரும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஜூன் 21ஆம் தேதி அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதாக தகவல் பெறப்பட்டது. வழக்கமான தொழிற்சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் வாயுவால் பாதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனே அவசர மருத்துவக் குழுக்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அமோனியா வாயுவை சுவாசித்ததன் காரணமாக ஏற்படும் அறிகுறிகளான மூச்சுத்திணறல், கண் மற்றும் சுவாசப் பாதை எரிச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த அமோனியா வாயுக் கசிவு சம்பவத்தால் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 68 பேர் தற்போது சிகிச்சை பெற்று மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 65 பேர் பெண்கள் மற்றும் 3 பேர் ஆண்கள் ஆவர். இவர்களில் 17 நோயாளிகள் வென்டிலேட்டர் (Ventilator) உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

21 நோயாளிகளுக்கு மூக்குக் குழாய் (Nasal Oxygen) மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

30 நோயாளிகளின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது.

5 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிகழ்வில் 21.06.2026 இரவு 8.00 மணி நிலவரப்படி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 22.06.2026 மாலை 7.00 மணிக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 23.06.2026 காலை 7.00 மணி நிலவரப்படி 1 உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இன்று காலை 10.00 மணி நிலவரப்படி மேலும் 1 உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இதன் மூலம், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.  இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 8 பெண்கள் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல்கள் 23.06.2026 அன்று விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

மீதமுள்ள 5 பேரின் உடல்களும் அனைத்து சட்டரீதியான நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் உரிய நேரத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுடன், நிலைமையை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும்,

சரியான நேரத்தில் சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version