சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதி ராஜலட்சுமி அவர்களால் வழங்கப்படும். கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இரவு நடந்த இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த வழக்கில், அடையாறு பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர்.

 

சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. ஞானசேகரனுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராகாத நிலையில், சட்டப்பணி ஆணைக்குழு வக்கீல்கள் கோதண்டராமன், ஜெயபிரகாஷ் ஆகியோரை நியமித்தது.

 

ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version