திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.43 ஆயிரம் ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை, சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அலுவலக கோப்புகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.43 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் இந்தத் தொடர் சோதனைகள், லஞ்சப் புகார்களில் சிக்கி வரும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version