அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெறுவதற்கான பொது கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது*

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,26,959 ( ஷிப்ட் 1 – 101022 மற்றும் 2 – 25937) இடங்கள் உள்ளன. இப்படிப்புகளில் மாணவர்கள் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், 2026-2027ஆம் கல்வியாண்டில் இப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை பெறப்பட்டது. தொடர்ந்து, இந்த கால அவகாசத்தில்  விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக மீண்டும் ஜூன் 1 முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தாங்கள் விரும்பப்படும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து விண்ணப்பித்தனர். அதன்படி, இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 2-ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கல்லூரி வாரியாக நடைபெற்றது.

இதேபோன்று, பொதுப் பிரிவினர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 3-ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று முதல் பொது கலந்தாய்வு தொடங்கப்படுகிறது. கல்லூரி வாரியாக வரும் 18-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில கல்லூரிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மாநில கல்லூரியில் சேர்க்கை பெற மட்டும் அதிகபடியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இங்கு 2,380 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 46 ஆயிரம் மாணவர்கள் பலவகையான பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இந்த கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 15-ம் தேதி தொடங்க உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version