இந்தியாவின் பெருமைக்குரிய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவில் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 100 முதல் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககன்யான் மனித விண்வெளிப் பயணம், சந்திரயான்-3 வெற்றி, ஸ்பாடெக்ஸ் (SPADEX) உள்ளிட்ட முக்கிய தேசிய திட்டங்களில் முக்கியப் பங்காற்றிய அனுபவமிக்க விஞ்ஞானிகள் பலர் விலகியிருப்பது இஸ்ரோவின் மனிதவள மேலாண்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது இஸ்ரோவில் 14,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை மொத்த பணியாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகத் தோன்றினாலும், மூத்த மற்றும் திறமையான விஞ்ஞானிகளின் வெளியேற்றம் கவலையளிக்கிறது.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) சுமார் 20 பேரும், யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் (URSC) சுமார் 80 பேரும் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், எல்விஎம்-3 ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப், ஸ்பாடெக்ஸ் திட்ட இயக்குநர், சந்திரயான்-3 திட்ட மேலாளர் ஆதித்யா ரல்லபள்ளி உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இளம் விஞ்ஞானிகள் பலரும் விலகியுள்ளனர்.
2012 முதல் 2024 வரை மொத்தம் சுமார் 700 ஊழியர்கள் இஸ்ரோவை விட்டு வெளியேறியுள்ளதாக முந்தைய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனியார் விண்வெளி நிறுவனங்களின் வளர்ச்சி, சிறந்த சம்பளம், ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவை ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க இஸ்ரோ நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் பணியாற்றும் குரூப்-ஏ விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு (VRS) கோரிக்கைகளை இனி மைய இயக்குநர்கள் தாங்களாக ஏற்க முடியாது. அனைத்து விண்ணப்பங்களும் இறுதி முடிவுக்காக விண்வெளித் துறை (Department of Space – DoS) பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும். முக்கிய திட்டங்கள் நிறைவடையும் வரை அவற்றை ஏற்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது திட்டங்களின் தொடர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “எந்த நிறுவனத்திலும் பணியாளர்கள் விலகுவது இயல்பானது. ஆனால், தேசிய திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்றார். மேலும், 2025-26 ஆண்டுக்குள் 1,050 புதிய அறிவியல் மற்றும் நிர்வாகப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.இஸ்ரோவின் இந்த நடவடிக்கை, வருங்கால மக்கள் விண்வெளிப் பயணம், சந்திரயான்-4, இந்திய விண்வெளி நிலையம் உள்ளிட்ட உயர் இலக்குகளை நோக்கிய பயணத்தில் மனிதவளத்தை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
