நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்த போதிலும், ஹர்மன்பிரீத் கவுர் தொடர்ந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா  துணை கேப்டனாக நீடிக்கிறார்.

உலகக்கோப்பை அணியில் இருந்து ஒரேயொரு மாற்றம் மட்டுமே இந்த அணியில் செய்யப்பட்டுள்ளது. மோசமான ஃபார்ம் காரணமாக விக்கெட் கீப்பர் பேட்டர் யாஸ்திகா பாட்டியா அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜி. கமலினி  அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், உலகக்கோப்பை தொடரின் போது நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே விலகிய ஸ்ரேயங்கா பாட்டீல் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவரது உடற்தகுதி நிரூபிக்கப்பட்ட பிறகே அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பையில் அவருக்குப் பதிலாக விளையாடிய பிரேமா ராவத் இந்த அணியில் இடம் பெறவில்லை.

மீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்: ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரில் வரும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 வடிவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஆசியாவின் முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2022 ஆசிய விளையாட்டில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்ற நிலையில், இந்த 2026 தொடர் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்கான ஒரு முக்கிய தளமாக அமையவுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய மகளிர் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி. கமலினி (விக்கெட் கீப்பர்), பாரதி புல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல்*, ராதா யாதவ், நந்தினி சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version