மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, மாநில அரசின் அனைத்து நிர்வாகப் பணிகளிலும் தாய்மொழியான பெங்காலியை கட்டாயமாக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 1, 2026 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

குடிமக்கள் சேவைகள், டிஜிட்டல் தளங்கள், விண்ணப்பப் படிவங்கள், சான்றிதழ்கள், அரசு இணையதளங்கள், மொபைல் செயலிகள், பொது அறிவிப்பு பலகைகள், பத்திரிகை வெளியீடுகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளிலும் பெங்காலி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை சார்ந்த முதல் தகவல் அறிக்கைகள் (FIR), புகார் தீர்வு, குடிமக்கள் தரவு பாதுகாப்பு, பொது விழிப்புணர்வு செய்திகள் போன்ற சட்டம் ஒழுங்கு தொடர்பான சேவைகளிலும் பெங்காலி கட்டாயமாக்கப்படும்.

இந்த அறிவிப்பை டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்த நாள் விழாவையொட்டி வெளியிட்ட முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, “இந்திய மொழிகளைப் பாதுகாத்து, மேம்படுத்தி, நிர்வாகம், கல்வி மற்றும் பொது வாழ்வில் அவற்றுக்கு உரிய இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது டாக்டர் முகர்ஜியின் உறுதியான நிலைப்பாடு. அவரது சிந்தனையை நாங்கள் செயல்படுத்துகிறோம்” என்று கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு எழுதிய கடிதத்தில் மேற்கு வங்க நிர்வாகத்தில் வங்காள மொழியை பரவலாகப் பயன்படுத்த பரிந்துரை செய்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். இந்த பரிந்துரையை ஏற்று மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், 2011-ல் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சுசாந்தா சாட்டர்ஜி தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையை விரைவில் பொதுமக்கள் முன் வெளியிடப் போவதாகவும் சுவேந்து அதிகாரி அறிவித்தார். அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டும் பல ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த மாற்றத்தைச் செயல்படுத்த அரசு மொழிபெயர்ப்பாளர்கள் நியமித்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும். மத்திய அரசுடன் உள்ள தகவல் தொடர்புகளுக்கு ஆங்கிலத்துக்கு பதிலாக வங்காளம் மற்றும் இந்தி மொழிகளைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாநிலத்தின் மொழி பாரம்பரியத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்காலி மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அரசு சேவைகள் மக்களுக்கு மிகவும் எளிதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் மாறும். இது உள்ளூர் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் திறனை மேம்படுத்தவும், மக்கள்-அரசு இடையிலான தொடர்பை வலுப்படுத்தவும் உதவும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு மேற்கு வங்க அரசியல் மற்றும் நிர்வாகத் துறையில் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version